Sunday 23 December 2012

மாணவர்களின் பார்வையிலிருந்து... 
எப்படி இருக்க வேண்டும் நல்ல ஆசிரியர்... 

மெல்லிய புன்னகை இருக்க வேண்டும். 
சிடுசிடுவென இருக்கும் டெரர் மூஞ்சி மாணவர்களைக்  கலவரப்படுத்தும்.

தேவைப்படும் நேரங்களில் மட்டுமே கோபப்பட வேண்டும். 
அடிக்கடி கோபப்பட்டு, கோபத்திற்குரிய மரியாதையைக்  கெடுத்துவிடக்கூடாது.

பாடத்திட்டத்தோடு நின்றுவிடாமல், மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு உலக விஷயங்களையும் சொல்ல வேண்டும். 
சொல்லும் விஷயங்கள் புதியவைகளாக இருக்கவேண்டும்.

மாணவர்களின் மனநிலையைப்  புரிந்து கொண்டவராக இருக்க வேண்டும்.
பாடம் நடத்தும் போதும், வீட்டு வேலைகளைக்  கொடுக்கும்போதும் 
மாணவர்களின் மன, உடல் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


தங்கள் வீட்டின் கோபத்தை, வகுப்பறையின் வாசப்படிக்குக்  கூட கொண்டு வரக்கூடாது.

தனது மாணவர்களின் எதிர்காலம் தன் கையில் உள்ளது என்பதை உணர்ந்து, தொழில் பக்தியுடன், ஈடுபாட்டுடன் வகுப்பறையில் செயல்படவேண்டும்.

ஒருவேளை ஆசிரியரிடம் ஏதேனும் கெட்டபழக்கம் இருப்பின் அதன் நிழல் கூட தன் மாணவர்களின் மீது விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எப்போதும் திட்டக்கூடாது, மற்றவர்களுடன் ஒப்பிட்டு, இருவரையும் அவமானப்படுத்தக்கூடாது.

எப்போதும் படி,படி என ஒரேடியாக முகாரி ராகம் பாடி, 
வெறுப்பேத்தக்கூடாது.

எல்லாம் தெரிந்தது போல் பேசக்கூடாது, நீங்கள் பேசுவதில் எத்தனை சதவீதம் உண்மை, எத்தனை சதவீதம் டுபாக்கூர் என 
மாணவர்களால் உணர முடியும்.

ரொம்ப வருடத்திற்குப் பிறகு எங்காவது ரோட்டிலோ, கடைவீதியிலோ பார்க்க நேரிடும் போது, மரியாதை அதிகரித்திருக்க வேண்டும், குறைந்திருக்கக்கூடாது. 
படிக்கும் போது ஆசிரியர்களை மதிக்காமல் நடந்து கொண்டவர்கள் கூட, எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களைப்  பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் போது, காலில் விழுந்து வணங்கியவர்கள் உண்டு.

1 comment: